ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் கைது: போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம், பிப்.24:
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் மயர்பூரைச் சேர்ந்த சுரேந்திர
யாதவ் (32). இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு
தாக்குதல்களில் தொடர்புடையவர் என்பது போலீசார் விசாரணையில்
தெரியவந்துள்ளது.
மேலும் பீகாரில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் ஆகியோரை கொலை
செய்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில
மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அதன் பின்னர்
அவர் எங்கு இருந்தார் என்பது தெரியாமல் இருந்தன.
இந்நிலையில் "சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மாவோயிஸ்ட்
ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர
தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில்
பதுங்கியிருந்த சுரேந்திர யாதவ் என்பவரை கியூபிரிவு போலீசார் கைது
செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு
குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னை மயிலாப்பூர்
காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சுரேந்தர யாதவ் என்கிற அந்த
மாவோயிஸ்ட்டிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நீண்ட நேர
விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவதாக காவல்துறையினர்
தெரிவித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் ஜார்க்கண்ட் போலீஸாரிடம்
ஒப்படைக்கப்படுவார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments