Breaking News

ஆற்றுக்கால் பகவதி கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை

Attukal Bhagavathy Temple Pongal festivalதிருவனந்தபுரம், பிப்.24:
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 40 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன். பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் சிறப்பு பெற்றது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.

இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் விரதம் இருந்த பெண்கள் லட்சக்கணக்கானோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று காலை நடைபெற்றது.

இதைதொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் சுத்த பூஜையும் தொடர்ந்து கண்ணகி சரித்திர பாடல் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோவில் முன்பு உள்ள பொங்காலை அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரி தலைமையில் கோவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீ மூட்டினார். இதை தொடர்ந்து கோவிலை சுற்றி திரண்டிருந்த லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

கடந்த ஆண்டு 30 லட்சம் பெண் பக்தர்கள் பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தனர். இந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கல் விழாவில் பங்கேற்றது கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் கேரள ஆளுநர் சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி, தமிழ், மலையாள நடிகைகள் இனியா, சிப்பி, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

No comments

Thank you for your comments