10ம் வகுப்பு தேர்வை விரும்பும் மொழிகளில் எழுத உயர்நீதிமன்றம் அனுமதி
தமிழ் அல்லாத பிற மொழி மாணவர்கள், தாங்கள் விரும்பும் மொழிகளிலேயே பத்தாம் ஆண்டு அரசு பொது தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் மொழி அல்லாது, பிற மொழியில் பயின்று வரும் மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இதில், கடந்த 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின் படி, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.
பெரும்பாலான சிறுபான்மை பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தமிழில் தேர்வு எழுத வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் , தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த ஆண்டு, தமிழ் அல்லாது பிற மொழிகளில் தேர்வெழுத அனுமதி கேட்டு, சுமார் 7ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்கள், தாங்கள் விரும்பும் மொழியிலேயே பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதிக்கும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments
Thank you for your comments