Breaking News

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் மாற்றம்! - புதிய கூடுதல் பொறுப்பு அலுவலராக ச.சீனிவாசன் நியமனம்!


 காஞ்சிபுரம் | ஜூன் 12, 2026

உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலின் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) பதவியிலிருந்து ஆர்.ராஜலட்சுமி அதிரடியாக விடுவிக்கப்பட்டு, புதிய கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னணி மற்றும் பணியிட மாற்றம்:

செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வரும் ஆர்.ராஜலட்சுமி அவர்கள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் உதவி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்புகார்களைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன்படி, ஆர்.ராஜலட்சுமி வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பிலிருந்து கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டு, முழு நேரமாக அறநிலையத்துறை செங்கல்பட்டு சரக உதவி ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம்:

ஆர்.ராஜலட்சுமி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்கான புதிய உத்தரவையும் அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா, புகழ்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றி வரும் ச.சீனிவாசன் அவர்கள், தற்போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் செயல் அலுவலராகக் கூடுதல் பொறுப்பேற்று நிர்வாகத்தைக் கவனிப்பார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Thank you for your comments