Breaking News

"5 தலைநகரங்கள்.. அரசுப் பள்ளியில் தான் படிக்கணும்!" - சீமானின் 462 பக்க 'புரட்சிகர' தேர்தல் அறிக்கை வெளியீடு!

 சென்னை | மார்ச்19, 2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி (NTK) தனது விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் வகையிலான பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அறிவித்தார்.

ஐந்து தலைநகரங்கள் திட்டம்:

தமிழகத்தின் வளர்ச்சியைப் பரவலாக்க ஐந்து நகரங்களை வெவ்வேறு தலைநகரங்களாகச் சீமான் அறிவித்துள்ளார்:

  1. திருச்சி: நிர்வாகத் தலைநகரம் (தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் அலுவலகம் இங்கு மாற்றப்படும்).

  2. சென்னை: தொழில்நுட்பத் தலைநகரம்.

  3. கோயம்புத்தூர்: தொழில் மற்றும் வணிகத் தலைநகரம்.

  4. மதுரை: மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம்.

  5. கன்னியாகுமரி: தமிழர் மெய்யியல் தலைநகரம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:

  • அரசுப் பள்ளி கட்டாயம்: முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் கட்டாயம் அரசுப் பள்ளிகளில் தான் பயில வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படும்.
  • தமிழ் கட்டாயம்: தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலை உருவாக்கப்படும்.
  • கல்விக் கடன் ரத்து: மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
  • அரசுப் பணி: ஆடு, மாடு வளர்ப்பது அரசுப் பணியாக மாற்றப்படும். படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை உறுதி செய்யப்படும்.

சமூக நீதி மற்றும் பெண்கள் நலன்:

  • மகளிர் உரிமை: அரசுத் துறைகளில் பெண்களுக்கு 50% (சரிபாதி) இடஒதுக்கீடு வழங்கப்படும். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்குத் தனித் தொகுதிகள் பெறப் போராடுவோம்.
  • மாற்றுத்திறனாளிகள்: இவர்களுக்கெனத் தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர் உருவாக்கப்படும். உள்ளாட்சிப் பதவிகளில் 5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  • இடஒதுக்கீடு: ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டைத் தவிர்த்து, தமிழ் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்:

  • மதுவிலக்கு: ஓராண்டுக்குள் படிப்படியாக மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும்.
  • இலவசக் குடிநீர்: குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அனைவருக்கும் தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். ஆற்று நீரைப் பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படும்.
  • விவசாயிகள் ஓய்வூதியம்: 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • மணல் கொள்ளை தடுப்பு: மணல் கொள்ளை தடுக்கப்பட்டு, புதிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் உருவாக்கப்படும்.

இதர முக்கிய வாக்குறுதிகள்:

  • வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அஞ்சல் வழி வாக்குரிமை பெற்றுத் தரப்படும்.
  • தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்.
  • மக்கள் தேடி அரசு ஊழியர்களே வந்து சேவை வழங்கும் முறை அமல்படுத்தப்படும்.
  • அனைவருக்கும் சமமான, தரமான கட்டணமில்லா மருத்துவம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.


No comments

Thank you for your comments