Breaking News

பரந்தூர் விமான நிலைய நில அளவை ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது: ரூ.50 ஆயிரம் கைபற்றப்பட்டது!



காஞ்சிபுரம், பிப். 11: 

காஞ்சிபுரத்தில் நிலத்தை அளக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரந்தூர் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளர் சுந்தரவடிவேலுவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

லஞ்சப் புகார் விவரம்:

காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர், தனக்குச் சொந்தமான 64 சென்ட் நிலத்தைப் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக வழங்க முன்வந்து விருப்பமனு அளித்திருந்தார். இந்த நிலத்தைச் சரிபார்க்கும் குழுவில் இடம்பெற்றிருந்த நில அளவை ஆய்வாளர் சுந்தரவடிவேலு (41), பணிகளைச் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.


1 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்! 🙏சனி மகாபிரதோஷம் வழிபாட்டு முறைகள்! | Feb. 14

லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை:

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கலைச்செல்வனிடம் புகார் அளித்தார். அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின்படி, செங்கழுநீரோடை தெருவில் வைத்து முதற்கட்டமாக ரூ. 50 ஆயிரத்தை சுந்தரவடிவேலுவிடம் ரஞ்சித்குமார் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் கீதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர், சுந்தரவடிவேலுவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையும் சிறைவாசமும்:

பரந்தூர் விமான நிலையச் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, சுந்தரவடிவேலு சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments

Thank you for your comments