விருத்தாசலத்தில் அதிரடி: மேளதாளங்கள் முழங்க இலவச மனை பட்டா கேட்டு நாட்டுப்புறக் கலைஞர்கள் மனு!
விருத்தாசலம் :
நெருக்கடியில் வாழ்வாதாரம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வசித்து வருகின்றனர். பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து வரும் இவர்கள், தற்போது போதிய வருமானமின்றியும், வசிப்பிட வசதியின்றியும் தவித்து வருகின்றனர். குறிப்பாக, ஒரே சிறிய வீட்டில் இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இசை முழக்கத்துடன் வருகை:
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குத் தமிழ்நாடு கலைத்தாய் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாய. முனுசாமி தலைமையில் கலைஞர்கள் திரண்டு வந்தனர். வழக்கமான போராட்டமாக இல்லாமல், தங்களின் பாரம்பரிய அடையாளமான தப்பாட்டம் மற்றும் இசை வாத்தியங்களை முழங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.
கோரிக்கை மனு:
தொடர்ந்து கோட்டாட்சியரைச் சந்தித்த கலைஞர்கள், "தமிழக அரசு இசைக்கலைஞர்களுக்கென வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்" என்று கோரி மனு அளித்தனர்.
இந்த நூதன முறையிலான கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வு, அங்கு வந்திருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அதிகாரிகள் இந்த மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
செய்தித் துளிகள் (Media Info):
- செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
- இடம்: விருத்தாசலம்.
No comments
Thank you for your comments