காஞ்சிபுரம் அருகே பள்ளிப் பேருந்து மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்து - குழந்தைகள் படுகாயம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் பள்ளிப் பேருந்து மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்து.
13 பள்ளிக் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட படுநெல்லி கிராமத்தில் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
எல் கே ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இப்பள்ளியில் படு நெல்லி கிராமத்தை சுற்றியுள்ள இருவதற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமப்புற மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் வகையில் பள்ளி நிர்வாகமே பள்ளி பேருந்து சேவையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல பள்ளி வகுப்புகள் முடிந்து மாலையில் மாணவ மாணவிகள் பள்ளி பேருந்தில் ஏங படுநெல்லியிலிருந்து புறப்பட்டு புள்ளலூர் புரிசை சாலையில் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
கிராமப்புற சாலையில் பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றுக் கொண்டு வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளிப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த 13 குழந்தைகள் மற்றும் தொழிற்சாலை பேருந்தில் வந்த 21 பெண் தொழிலாளர்கள் உட்பட 34 பேர் கை கால் முகம் தலை என பல்வேறு இடங்களில் பலத்த காயம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்த கிராம மக்கள் காயம் அடைந்தவர்களை நீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து பொன்னேரி கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்த 34 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் ஆறுதல் கூறி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களை அறிவுறுத்தினார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து பொன்னேரிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments