Breaking News

554 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.26 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள்


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று (11.06.2025) சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு  துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை  காணொளி காட்சி மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டதை,  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள்  பார்வையிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 554 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.26 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் குடும்பங்களை ஒருங்கிணைத்து மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல் அக்குழுக்களுக்கு ஆதார நிதி வழங்குதல்  குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு பெற்றுத்தருதல் மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பளித்தல், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பண்ணை சாரா தொழில்களுக்கு கடனுதவிகள் வழங்குதல், சமுதாய முதலீட்டு நிதி மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தொழில் கடன் வழங்குதல், சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு வறுமை ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுய உதவிக்குழுக்களும் நகர்ப்புற பகுதிகளில் 1,982 மகளிர் சுய உதவிக்குழுக்களும் மொத்தம் 9,374 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,12,880 பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 2024-25 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ரூ.694 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரையில் ரூ. 694.24 கோடி எய்தியுள்ளது. 

அதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 548 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.23 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் (நுண் நிதி கடன்)   6 பயனாளிகளுக்கு ரூ.3.2 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம்  554 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.26  கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து வங்கி கடனுதவிகள் பெற்ற உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் யமுனை மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த மகளிர்கள் ”நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் தெரிவித்ததாவது:

எங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இதுவரை இரண்டு  முறை வங்கி கடன் உதவிகளை பெற்று சொந்த தொழிலை சிறப்பாக  செய்து வருகிறோம். தற்போது ரூ.15 இலட்சம் வங்கிக்கடன் இணைப்பு பெறுகிறோம். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் சொந்த தொழில் செய்வதால், எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதுடன், வங்கிக்கடன்களை சொந்த தொழிலில்வரும் வருமானத்தில் திரும்ப செலுத்துவதுடன், குடும்பத்திற்கு தேவையான அனைத்து தேவைகளை இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்கிறோம். இவ்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, திட்ட இயக்குநர்  (மகளிர் திட்டம்) திரு.மு.பிச்சாண்டி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா, காஞ்சிபுரம்  ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments