Breaking News

கோவையில் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் தூக்கி நிறுத்தப்பட்ட கேஸ் டேங்கர்

கோவை: 

கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அந்த டேங்கர் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.


விபத்துக்குள்ளான டேங்கரை மீட்பதற்கு தீயணைப்புத் துறையினர், போலீஸார் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் லாரி தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. பாரத் கேஸ் நிறுவன உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மீட்புப் பணிக்காக 3 ராட்சத கிரேன்கள் பீளமேட்டில் இருந்து வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து கீழே விழுந்து கிடந்த டேங்கரில் பெரிய கயிறைக் கட்டி அதை கிரேனுடன் இணைத்து டேங்கரை தூக்கி நிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மீட்புப் பணியை மேற்கொள்ள ஏதுவாக அங்கு வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டது.

டேங்கரை தூக்கும் பணி நடந்தபோது அங்கு இருந்தவர்கள் 15 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தள்ளி நிறுத்தப்பட்டனர். டேங்கரை தூக்கும் பொழுது தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கையாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கத் தயாராக நிறுத்தப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் டேங்கர் தூக்கி நிறுத்தப்பட்டது.

கீழே விழுந்ததில் டேங்கரின் கீழ் பகுதி ஒடுங்கி சேதமடைந்து காணப்பட்டது. டேங்கர் தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக அதை அப்புறப்படுத்தும் பணிகள் பற்றி ஆலோசனைகள் நடைபெறுகிறது.

No comments

Thank you for your comments