சட்டப்பேரவை தேர்தலின்போது ‘DMK Files- 3’ வெளியிடப்படும்: புயலை கிளப்பிய பாஜக அண்ணாமலை
திருச்சி:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் இன்று (டிச.10) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வரும் 12-ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் சட்டப்பேரவையில் நாடகமாடியுள்ளார். முதல்வர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்சினைக்காக முதலில் அவர் பதவி விலக வேண்டும்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசு மாற்று பெயரில் திட்டத்தை திட்டமிட்டு அமுல்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள் அப்படி கிடைக்காவிட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள்.
ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா?
தமிழகத்தில் ரவுடிகளுக்கு காவல்துறையினரின் மீது இருந்த அச்சம் போய்விட்டது. தமிழக முதல்வர் காவல்துறையின் கைகளில் கட்டப்பட்டுள்ள கயிற்றை அவிழ்த்து விட வேண்டும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கம் பல்வேறு பழிவாங்கும் படுகொலைகளை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது.எனவே, இலங்கையிலும் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியை நடத்துவது திருமாவளவனா அல்லது துணை பொதுச் செயலாளரா என நான் கேட்டிருந்தேன். இதனால் அவருக்கு திடீரென கோபம் வந்துள்ளது. அவர் ஒரு மூத்த தலைவர். 15 நாட்களாக கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகின்ற வேளையில் திமுக ஃபைல்ஸ்- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும். இதில் மூன்றரை வருடத்துக்கான டெண்டர் விவாகரம் புகைப்படத்தோடு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் இல.கண்ணன், மாநில நிர்வாகி புரட்சிக்கவிதாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Post Comment
No comments
Thank you for your comments