Breaking News

காஞ்சிபுரத்தில் இன்று சங்கராசாரியார் சுவாமிகளின் விஸ்வரூபயாத்திரை - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு

காஞ்சிபுரம், செப்.17:

காஞ்சிபுரத்தில் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வந்த சங்கராசாரியார் சுவாமிகளின் விரதம் நிறைவு பெற்றதையடுத்து புதன்கிழமை பள்ளிமாணவர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.


காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 21.7.24 ஆம் தேதி முதல் 17.9.24 ஆம் தேதி வரை சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வந்தார். துறவியர்கள் தங்களது தவ வலிமையை பெருக்கிக் கொள்ளவும், உலக நன்மைக்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம்.

இந்த நாட்களில் துறவியர்களை சந்தித்து வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.விரதம் நிறைவு பெற்றதையடுத்து புதன்கிழமை பொதுமக்கள் பலரும் அவர்களை தரிசிக்க ஏதுவாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் மகா பெரியவர் மணி மண்டபத்திலிருந்து மூங்கில் மண்டபம்,பேருந்து நிலையம், கச்சபேசுவரர் கோயில் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் ஊர்வலம் நிறைவு பெறுகிறது.

ஊர்வலத்தில் 7 சிவ வாத்தியக் குழுவினர்கள், 8 பஜனைக்குழுவினர், 10க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் குழுவினர், ஆழ்வார் திருநகரியை சேர்ந்த ஸ்ரீபாத சேவகர்களின் தீப்பந்த சேவை,கோலாட்டம், சிலம்பம், பழங்குடியினர் நடனம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்,15 பள்ளிகள் மற்றும் 11 கல்லூரிகளின் மாணவ, மாணவியர்கள் 10 பரத நாட்டியப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள்,தெருக்கூத்துக் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

வழிநெடுகிலும் 13 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.ஊர்வலத்தின் நிறைவில் காமாட்சி அம்மன் கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கி பேசுகிறார். 

இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் 40க்கும் மேற்பட்ட கோயில்களின் பிரசாதங்களும் வழங்கப்படவுள்ளன. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,செயலாளர் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர்,சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் தலைமையிலான குழுக்களும் பல்வேறு அமைப்புகளும் இணைந்து செய்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments