காஞ்சிபுரம் திமுக மேயருக்கு எண்டு கார்டு - நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்ப்பு கவுன்சிலர்கள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ள நிலையில் மாநகராட்சி மேயர்,துணை மேயர்,49 மாமன்ற உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர்.இதில் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி மேயராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாகவே காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் இடையே பனிப்போர் நிலவி வந்தது.மாநகராட்சி மேயர் தங்களை உரிய முறையில் மதிக்கவில்லை தங்கள் வார்டுகளுக்கு தேவையான மக்கள் நல பணிகளை செய்து தரவில்லை என அதிமுக, பாமக,பாஜக, தமாக, சுயேட்சை, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூறி வந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும்,சேர்ந்து கொண்டு மேயர் மகாலட்சுமி யுவராஜ் உடன் மோதல் போக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் திமுக மற்றும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் என 33 பேர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் எவ்வித அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாநகராட்சியில் மேயரின் கணவர் யுவராஜின் தலையீடு தொடர்ந்து இணைந்து வருவதாகவும், வணிக நிறுவனங்கள் பொதுமக்களிடம் பல்வேறு பணிகளுக்காக வசூல் வேட்டி நடத்தி அதிகாரிகளை மிரட்டி அடிபணிய வைத்து தங்களது காரியத்தை செய்து கொள்வதாகவும் இதுகுறித்து மாநகராட்சி மேயரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கி இருந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி துறை அமைச்சர்
கே.என் நேரு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயரை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.இதில் உடன்பாடு எட்டபடாததால் இதற்கிடைபட்ட காலத்தில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் 6கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றாலும் எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் ஒற்றை காலில் நின்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மேலும் திமுக மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கி வரும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் 18 பேர் தாங்கள் வகித்து வந்த நிலைக்குழு பதவிகளையும் ராஜினாமா செய்தனர்.
மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 மண்டல குழுக்கள் உள்ள நிலையில் அதில் ஒரு மண்டல குழு தலைவர் மேயர் வசமும், மீதமுள்ள மூன்று மண்டல குழு தலைவர்கள் எதிர்ப்பு கவுன்சிலர்கள் வசம் உள்ள நிலையில் மேயர் வசம் உள்ள இரண்டாவது மண்டல குழு தலைவர் சந்துருவை அப்பதவிலிருந்து விலக்கு அளிக்க கோரி அக்குருவில் மொத்தம் 13 மாமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் 7 எதிர்ப்பு மாமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக ஆணையரிடம் மனுவை அளித்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடத்தில் மேயர் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி மனு அளித்து மாநகராட்சி ஆணையருக்கு அதற்கான நகலை அனுப்பியிருந்த நிலையில் இவை ஏற்கத்தக்கதல்ல என மாநகராட்சி ஆணையர் தரப்பில் எதிர்ப்பு கவுன்சிலர்களுக்கு பதில் மனு அளித்த நிலையில் நேரில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 33 கவுன்சிலர்கள் கையெழுத்துடன் கூடிய மனுவையும், அதன் உண்மை தன்மையை அறிந்திடும் வகையில் பிரமாண பத்திரத்தையும் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகனிடம் அளித்திருந்தனர்.
ஆனாலும் ஒரு மாதங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வியை கடந்த வாரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து 33 எதிர்ப்பு கவுன்சிலர்கள் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் எதிர்ப்பு கவுன்சிலர்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று,
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 (திருத்தப்பட்ட சட்டம் 32, ஆண்டு 2022) பிரிவு 51 (2)(3) படி காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களால் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் (29-07-24) திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்ட த்தில் நடைபெற உள்ளது என்றும், மேற்படி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், என அறிவிப்பு வெளியிட்டு அதற்கான கடிதங்களை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
No comments
Thank you for your comments