விவசாயிகள் ஏரிகளில் கட்டணமின்றி களிமண் எடுத்துச் செல்லலாம் - காஞ்சிபுரம் ஆட்சியர் பேச்சு
காஞ்சிபுரம், ஜூலை 8
விவசாயிகள்,மண்பாண்டத் தொழிலாளர்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் வண்டல் மண் அல்லது களிமண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் விவசாயிகள் 4 பேருக்கும், மண்பாண்டத் தொழிலாளர்கள் 5 பேருக்கும் சிறுனை ஏரியில் கட்டணமின்றி மணல் எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பேசியது.
விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் கட்டணமின்றி வண்டல்மண், களி மண் எடுத்துக் கொள்ளலாம். விவசாய பயன்பாட்டினைப் பொறுத்தவரை நஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள் எடுத்துக் கொள்ளலாம். புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டரும், 30 டிராக்டர் லோடுகளும் எடுத்துக் கொள்ளலாம்.
மண்பாண்டம் தயாரித்தலுக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் வழங்கப்படும் என்றும் பேசினார். முன்னதாக காஞ்சிபுரத்தை அடுத்த சிறுனை ஏரியில் டிராக்டர் மூலம் களிமண் எடுக்கும் பணியையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் ஆறுமுக நயினார், உதவி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் மார்க்கண்டேயன்,காஞ்சிபுரம் ஒன்றியத்தின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,விவசாயிகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments