Breaking News

ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

 ஹத்ராஸ்:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். 



ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். 

ஹாத்ரஸ் மாவட்டம், முகல்கர்ஹி கிராமத்தில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் எடாஹ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் எவ்வாறு நேரிட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ வைரல்

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி இரங்கல்

இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்களவையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தலா ரூ.2 லட்சம் நிதி உதவி

ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  


No comments

Thank you for your comments