குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு 1165 கையடக்க கணினிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்
காஞ்சிபுரம், ஜூலை 8:
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெ.யோகஜோதி(பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 480 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களது கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த மொத்தம் 1165 கையடக்க கணினிக்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 14 மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதியுதவிகளாக ரூ.2,38,500 மற்றும் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடனாக ரூ.3,24,165 ஆகியன உட்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயசங்கர்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments