நெல்மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் - காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை
காஞ்சிபுரம்,மே.7:
காஞ்சிபுரம் மாவட்டம் கட்டவாக்கம் ஊராட்சியில் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த போது நெல்மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தார்பாய்களை போட்டு எப்போதும் மூடியிருக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மழை பெய்தால் நெல் மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டு விடாதவாறு தார்ப்பாய்களை கொண்டு முழுமையாக மூடியிருக்க வேண்டும் என்று அங்கு பணியாற்றுவோருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இதனையடுத்து திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்திற்கு அருகிலேயே ரூ.14.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 3 ஆயிரம் மெ.டன் அளவு கொண்ட 5 நெல் சேமிப்புக் கிடங்குகளையும் ஆட்சியர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஆட்சியரது ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருள் வனிதா,உதவி மேலாளர் ஜெயவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments