மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து : அடுத்தடுத்து மோதிய லாரி, பஸ்கள் - நான்கு பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு - பலர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழுமத்தூர் - புக்க துரை கூட்ரோடு பகுதியில் , திருச்சி சென்னை தேசிய பிரதான சாலையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு இருவதற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் சென்னை திருச்சி பிரதான சாலையில் தென் மாவட்டங்களில் இருந்து இரவு நேரங்களில் ஏராளமான ஆம்னி பேருந்துகள் , அரசு பேருந்துகள் மற்றும் சென்னைக்கு பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அதிகளவு சாலையில் பயணிப்பது வழக்கம்.
இரவு நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இரவு நேர பயணத்தையே விரும்புவார்கள் . சில சமயங்களில் இது போன்று இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திருச்சியிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி, சென்னை-திருச்சி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழமத்தூர் - புங்கதுரை கூட்ரோடு அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கனரக சரக்கு லாரியை முந்த முயற்சி செய்த பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதனால் ஆம்னி பேருந்தின் இடது புறம் முழுவதும் சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியது. இந்த நிலையில் ஆம்னி பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் , முன்னாள் சென்ற ஆம்னி பேருந்து திடீரென விபத்துக்குள்ளானதால், முன்னாள் சென்ற ஆம்னி பேருந்தில் பின்புறம் அரசு பேருந்து மோதியது
இந்த கொடூர விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியும் மற்றும் வாகனத்துக்குள் சிக்கி இருக்கும் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த கோர விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் 5 இளைஞர்கள் என 9 பேர் உயிரிழந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த நான்கு பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்ததாவது,
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சென்னை&திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட புக்கத்துறை கூட்டுசாலை அருகில் இன்று (16.05.2024) அதிகாலை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த திருமதி.தனலட்சுமி (வயது 53) க/பெ.வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அகிலி கிராமத்தைச் சேர்ந்த திரு.ராஜேஷ் (வயது 30), த/ப.சுப்பிரமணி, சென்னை, பட்சாலையைச் சேர்ந்த திரு.பிரவின் (வயது 24), த/பெ.அவேஷ் மோகன் மற்றும் அடையாளம் தெரியாத பெண் உட்பட நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்து, காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments