Breaking News

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு - காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம், மே.9:

வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வெப்ப அலையாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து அரசின் சார்பிலும்,வானிலை ஆய்வு மையத்தின் சார்பிலும் கோடை வெப்பம் குறித்து எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. 

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள குடிநீர் குடில்கள்,ஓஆர்எஸ் திரவக் கரைசல் ஆகியன மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பேருந்து நிறுத்தங்கள்,பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வழங்கப்படும்.இப்பணியினை பொது சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கம் காரணமாக தொழிலாளர்கள்,சாலையோர வியாபாரிகள் மிகவும் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப் படுகிறது.தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு அந்தந்த தொழிற்சாலை நிர்வாகங்கள் உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்யும் திரவக்கரைசல்களை தொழிற்சாலைகளில் அமைத்திட வேண்டும்.

தொழிற்சாலைகளில் உள்ள மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியனவற்றில் வெப்ப அலையை எதிர்கொள்ள போதுமான மருந்துகளை வாங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

கோடைகால வெப்ப அலையை தடுக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் தேவையான அளவு தண்ணீர் குடித்தல், பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுதல், இளநீர், மோர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை குடித்தல், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளையே அணிதல், வெளியே செல்லும் போது காலணிகள், தொப்பிகள் அணிந்து கொள்ளுதல் ஆகியன அவசியமாகும்.

வெப்ப அலையில் எவரேனும் பாதிக்கப்பட்டால் மருத்துவ உதவிக்கான 108 இலவச சேவை எண்ணை பயன்படுத்தி மேல் சிகிச்சை மேற்கொள்ள அருகிலுள்ளவர்கள் உதவ வேண்டும் என்றும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments