காஞ்சிபுரத்தில் ஹஜ் பயணிகள் 88 பேருக்கு தடுப்பூசி முகாம் - காஞ்சிபுரம் ஆட்சியர் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், மே 13:
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள 88 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாமை திங்கள்கிழமை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
ஹஜ் பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் வாழ்நாள் கனவாக உள்ளது.ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் சில தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வது கட்டாயமாகும்.அப்போது தான் அவர்கள் அந்த நாட்டிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு வாய் வழியாக செலுத்தப்படும் போலியோ சொட்டு மருந்து, மூளைக் காய்ச்சலைத் தடுக்கும் தடுப்பூசி, இன்புளூயன்சா தடுப்பூசி ஆகியன செலுத்தப்படுகிறது. இவற்றில் இன்புளூயன்சா தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கமே தடுப்பூசிகளை செலுத்துகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 49 ஆண்கள்,39 பெண்கள் உட்பட மொத்தம் 88 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இதில் 11 வயது மற்றும் 15 வயதுடைய இரு குழந்தைகளும்,65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 பேரும் உள்ளனர்.
இவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டது.
இவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்றது.இதுநாள் வரை ஹஜ் பயணம் செல்பவர்கள் சென்னைக்கோ அல்லது வேறு மாவட்டங்களுக்கோ சென்று தடுப்பூசி செலுத்தி வந்தனர்.
ஆண்கள், பெண்கள் என இருபாலரையும் தனித்தனியாக மருத்துவர்கள் பரிசோதித்த பின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.அவர்களுக்கு குடிநீர் வசதி,கழிப்பறை வசதி போன்றவை சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இச்சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
நிகழ்வின் போது பொது சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில்,மருத்துவப்பணிகள் துறையின் இணை இயக்குநர் கோபிநாத்,அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்,நோயியல் நிபுணர் லாவண்யா,மாவட்ட தாய் சேய் நல அலுவலர் அபிதா ஆனந்த சௌந்தர்யா,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரமூர்த்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments