Breaking News

156 இருதய நோயாளிகளுக்கு ரூ.1.70 கோடி நிதி உதவி,காஞ்சி சங்கர மடம் வழங்கியுள்ளது

காஞ்சிபுரம்,மே 14

இருதய நோயாளிகள் 156 பேருக்கு காஞ்சி சங்கர மடத்தின் ஒரு அங்கமாக திகழும் ஸ்ரீ சங்கரா ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் ரூ.1.70 கோடி நிதி உதவி வழங்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


படவிளக்கம்: ஸ்ரீசங்கரா ஹார்ட் பவுண்டேஷன் அமைப்பின் அறிக்கையை வெளியிடுகிறார் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் (இடது ஓரம்)அமைப்பின் தலைவர் ஜெ.எஸ்.என்.மூர்த்தி

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீ சங்கரா ஹார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது.இதன் தலைவராக ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் கல்லூரியின் துணைவேந்தராக இருந்து வரும் ஜெ.எஸ்.என்.மூர்த்தி செயல்பட்டு வருகிறார்.

இவர் ஹார்ட் பவுண்டேஷன் அமைப்பின் கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தார். இந்த அமைப்பு மூலம் ஏழை,எளிய மக்களுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள நிதிஉதவி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளபடி 156 இருதய நோயாளிகளுக்கு ரூ.1.70 கோடி வரை நிதி உதவி செய்யப்பட்டிருக்கிறது. இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் இருதய நோயாளிகளும் இதில் அடங்குவார்கள். இதே போல மணிப்பூரில் 30 இருதய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுக்கவும், ஆலோசனைகள்,மருந்துகள் ஆகியன வழங்கவும் ஸ்ரீ சங்கரா ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

முன்னதாக சங்கரா ஹார்ட் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரான ஜெ.எஸ்.என்.மூர்த்தி அமைப்பின் கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ஸ்ரீ விஜயேந்திரரிடம் சமர்ப்பித்தார்.பின்னர் அதனை ஸ்ரீ விஜயேந்திரர் வெளியிட்டார்.இந்நிகழ்வின் சங்கர மடத்தின் பக்தர்களான புதுதில்லியை சேர்ந்த அனுசுமன்ராவ் மற்றும் மிஸ்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments

Thank you for your comments