Breaking News

தேர்தல் புகார்களுக்கு பொதுமக்கள் சி.விஜில் செயலியை பயன்படுத்துங்கள் - காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்

காஞ்சிபுரம், ஏப்.10:

தேர்தல் தொடர்பான எந்தப் புகாரையும் பொதுமக்கள் சி.விஜில் செயலியில் தெரிவித்த உடன் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும்,தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தெரிவித்தார்.


படவிளக்கம் : சி.விஜில் செயலிக்கான விளம்பரப் பதாகையை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட அதனை பெற்றுக் கொண்ட எஸ்பி கே.சண்முகம் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்


காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சி.விஜில் செயலிக்கான விளம்பரப் பதாகையினை மாவட்ட ஆட்சியரும்,தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் வெளியிட அதனை எஸ்பி கே.சண்முகம் பெற்றுக்கொண்டார்.இதன் பின்னர் ஆட்சியர் சி.விஜில் செயலி குறித்து மேலும் தெரிவித்தது..

தேர்தல் தொடர்பான எந்த புகாரையும் பொதுமக்கள் சி.விஜில் செயலி மூலம் தெரிவிக்கலாம்.இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பொதுமக்கள் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.இச்செயலியில் வேட்பாளர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ யாரும் பணம்,பரிசுப் பொருட்கள்,கூப்பன்கள்,மதுபான விநியோகம்,அனுமதியில்லாமல் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைத்திருப்பது,தேர்தல் தடை விதிக்கப்பட்ட நேரங்களில் பிரச்சாரம் செய்வது என்பன போன்ற எந்த தேர்தல் விதிமீறலையும் பொதுமக்கள் புகாராக தெரிவிக்கலாம்.

தரப்படும் புகார்கள் ஆடியோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யலாம். பெறப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை புகார் கொடுத்தவருக்கு உடனடியாக தெரிவிக்கிறோம்.புகார் செய்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.சி.விஜில் செயலியில் இதுவரை 113 புகார்கள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான பொய்யான தகவல்கள், வதந்திகள் பரப்பினாலும் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.காஞ்சிபுரம்,ஆலந்தூர் தொகுதிகளிலிருந்து தான் அதிகமான புகார்கள் சி.விஜிலிக்கு வந்துள்ளன.

இதுவரை ரூ.10.5 கோடி வரை பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9.6கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1327 பேர்,மாற்றுத்திறனாளிகள் 1256 பேர் உட்பட மொத்தம் 2583 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.இதில் 1195 பேர் தபால்வாக்கு செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

எஸ்பி கே.சண்முகம் கூறுகையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 175 கண்டறியப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 69 பேர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,ஆட்சியர்(பயிற்சி)க.சங்கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.


No comments

Thank you for your comments