இந்தியா 3 வது பொருளாதார நாடாக உயர்த்தப்படும் - பாஜக மாநில செயலாளர் பேட்டி

காஞ்சிபுரம், ஏப்.15:

உலக அளவில் இந்தியா 3 வது பொருளாதார நாடாக அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும் என பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.



காஞ்சிபுரத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் திமுக அரசு செய்துள்ள திராவிட மாடலின் சாதனைகள் என்ற நூலை வெளியிடும் விழா நடைபெற்றது.கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு,மாவட்ட பொதுச் செயலாளர் டி.வாசன்,எம்.ருத்ரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புத்தக வெளியீட்டு விழாவிற்கு பின்னர் எஸ்.ஜி.சூர்யா மேலும் கூறியது.

பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது இந்தியாவின் பொருளாதாரம் 11 வது இடத்தில் இருந்ததை இப்போது 5 வது இடத்துக்கு மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

இது அடுத்த 5 ஆண்டுகளில் 3 வது இடத்துக்கு கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாகவும் கொடுத்துள்ளோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு விட்டது.முதல் 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த சாதனைகளையும்,இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு செய்யப்போகும் வாக்குறுதிகளையும் 76 பக்க புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.

இத்தேர்தலின் வாக்குறுதிகளாக நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கிக்கிடப்பதை தடுக்கும் வகையில் ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும்.குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் 100 சதவிகிதம் வழங்கப்படும்.

இந்தியாவில் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.மத்திய அரசு தமிழகத்தக்கு மட்டும் பல்வேறு துறைகளில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 10.76 லட்சம் கோடி வழங்கியிருப்பதையும் அது எந்தெந்த துறைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது என்பதையும் அறிக்கையாக தயாரித்து மக்களுக்கு வழங்கி வருவதாகவும் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்தார்.

 

No comments

Thank you for your comments