மக்களவைத் தேர்தல்-2024 : திமுக-அதிமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது
சென்னை, மார்ச் 11-
திமுக நேர்காணல்
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸூக்கு 9 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திமுக 21 தொகுதிகளில் நேடியாக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இருப்பினும், அந்த 21 தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை, இன்று (10.3.2024), அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு துரைமுருகன், பொருளாளர் திரு… pic.twitter.com/KPZzt5eXsX
— DMK (@arivalayam) March 10, 2024
இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக சார்பில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட 2,984 மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியாக விருப்ப மனு அளித்தவர்களைச் சந்தித்து நேர்காணல் நடத்தினர்.
இந்த நேர்காணலில் பங்கேற்றுள்ள வேட்பாளர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கள சூழல் மற்றும் தேர்தல் பணி குறித்த விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். மேலும், நேர்காணலுக்கு வந்த வேட்பாளர், கட்சிக்காக முந்தைய காலங்களில் செய்த பணிகள் குறித்தும் விருப்பமனு அளித்துள்ள வேட்பாளர்களிடம் முதல்வர் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேர்காணலில், விருப்பமனு அளித்தவர்களின் ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் சுமார் 2,500 விருப்ப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்றும், இன்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
நேற்று, திருவள்ளூர் (தனி), வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி) மற்றும் கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தலைமைக் கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' @EPSTamilNadu அவர்கள் தலைமையில் தொடங்கியது.
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) March 10, 2024
1(3) #தமிழர்_உரிமை_மீட்போம்… pic.twitter.com/jLqE9wYwRd
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருவள்ளூர், சென்னை வடக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று, பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகை (தனி), தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி) , கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது.
No comments
Thank you for your comments