Breaking News

காஞ்சிபுரத்தில் 100 கிராமங்கள் தத்தெடுப்பு

காஞ்சிபுரம், மார்ச் 8:

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த நாயகன் பேட்டையில் இரு தொண்டு நிறுவனங்கள் இணைந்து 100 கிராமங்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


படவிளக்கம் : நாயகன் பேட்டையில் பழங்குடியின மூதாட்டி ஒருவருக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகிறார் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் தலைவர் கல்பனா சங்கர்


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயகன் பேட்டையில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனமும், சாய்பாபா அறக்கட்டளையும் இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 100 கிராமங்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலவர் கல்பனா சங்கர் நிகழ்வைத் தொடக்கி வைத்தார். பின்னர் ராஜம்பேட்டை, பூசிவாக்கம், கீழம்பி, புளியம்பாக்கம், புத்தேரி, களக் காட்டூர் மற்றும் நாயகன் பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 61 பழங்குடியின வகுப்பை சேர்ந்த முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கு மளிகைப் பொருட்கள், புத்தாடைகள்,உணவுப் பொட்டலங்கள் ஆகியனவற்றையும் வழங்கினார்.

இத்திட்டமானது வரும் 2 ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பசுமையான சுற்றுப்புறத்தை ஊக்குவிக்க வலியுறுத்துதல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்பாடு அடையச் செய்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அறங்காவலர் மங்களா ஐயர், துணைத் தலைவர் பிரேம் ஆனந்த், உதவிப் பொதுமேலாளர் மோகனவேல் மற்றும் முதன்மை மேலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments