Breaking News

பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி தொடங்கியது... டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதுடெல்லி: 

மத்திய அமைச்சர்களுடன் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து விவசாயிகளின் "டெல்லி சலோ பேரணி" இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த பேரணியால் டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

டெல்லி-அம்பாலா சாலையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (பிப்.13-ம் தேதி) டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தன. 

பேச்சுவார்த்தை 

இந்தச் சூழலில், சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை திங்கட்கிழமை மாலை 5.30-க்கு தொடங்கி சுமார் 7 மணி நேரம் நீடித்து. பேச்சுவார்த்தையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையில் விவசாய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரவு 11 மணி வாக்கில், மின்சாரச்சட்டம் 2020, லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை, விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகளின் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகள் தொர்டர்பாக இரண்டு தரப்புகளுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. 

தோல்வி

இருப்பினும், முக்கிய கோரிக்கைகளான அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக சட்டம் இயற்றுதல், விவசாயிகளின் கடன் ரத்து, சுவாமிநான் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது போன்ற கோரிக்கைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.  இதனால் நள்ளிரவுக்கு முன்பு பேச்சு வார்த்தை தோல்வியில் நிறைவடைந்தது. 

அரசின் வாக்குறுதிகள்

இதனைத் தொடர்ந்து “இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தது. எங்களது ஒவ்வொரு கோரிக்கை மீதும் விவாதம் நடந்தது. ஆனால், அவை வெறும் கோரிக்கைகள் அல்ல, அவை அனைத்தும் அரசின் வாக்குறுதிகள். அதனால் காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டெல்லி நோக்கி செல்ல வேண்டும் என்பது என் கருத்து” என விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்திருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் பாதி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது. நாங்கள் இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் முடிக்க விரும்புகிறோம். ஆனால் அரசு உண்மையாக இல்லை. அவர்கள் நேரத்தை வீணாக்கவே விரும்புகிறார்கள் என்று விவசாயிகள் பிரதிநிதி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் ஏற்கெனவே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராட்டம் நடத்தியதால், இந்த முறை அதுபோல் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் பாதுகாப்பு

விவசாயிகளின் பேரணியைத் தடுக்கும் நோக்கில் டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கு, திக்ரி மற்றும் ஹாசிபூர் எல்லைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். 

தடைவிதிப்பு

நகரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், டிராக்டர்கள் நகருக்குள் நுழைவதற்கு ஒரு மாதகாலம் போலீஸார் தடைவிதித்துள்ளனர். இந்தப்பகுதிகளில் கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளில் காங்கரீட், முள் வேலி தடுப்புகள் போடப்பட்டுள்ளன. வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு வேலிகள்

பஞ்சாப் விவசாயிகள் ஹரியாணா நுழைவதைத் தடுக்க, இரு மாநில எல்லையில் உள்ள அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருக்ஷேத்ரம், சிா்சா ஆகிய பகுதிகளின் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு ஆணி வேலிகள் மற்றும் முள்கம்பிகள் கொண்டு ஹரியாணா மாநில காவல்துறையினா் ஏற்படுத்தியுள்ளனா்.

144 தடை உத்தரவு

காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிராக்டா்களில் பேரணியாகச் செல்வதைத் தடுக்கும் விதமாக ஹரியாணாவின் 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. மத்திய துணை ராணுவப் படையின் 50 கம்பெனி படைகளுடன் மாநில காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஏழு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஹரியாணா அரசு 2021ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மாநில உள்துறை விதிகளை தீவிரமாக கடைபிடிக்கும் படி குடிமை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி நோக்கி டிராக்டா் பயணம்

பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், அதன்படி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகள் 10 ஆயிரம் டிராக்டர்களில் டெல்லி நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

2020 விவசாய போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பின் பாரதிய கிசான் யூனியன் விவசாயிகளின் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு போராட்டத்தில் பங்கேற்பதை இந்த முறை தவிா்த்துள்ளது.

 கண்ணீர் புகை குண்டு வீச்சு

விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ போராட்ட ஊர்வலத்தின் ஒரு பகுதியாக இளைஞர்கள் குழு அம்பாலாவில் உள்ள சம்பு எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைக்க முயன்றபோது ஹரியாணா காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குல் நடத்தியுள்ளது. விவசாயிகள் சம்பு எல்லைக்கு அருகில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல்களையும் எதிர்கொண்ட படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த பேரணியால் டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்

இந்நிலையில், தில்லி நோக்கி பேரணியாகச் செல்லும் விவசாயிகளை தடுக்கும் விதமாக ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லைகளை மூடியதற்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மக்கள், தாங்கள் எதிரி தேசத்து மக்களாக கருதப்படுவதைப் போன்று உணர்வதாக, ஹரியாணா மற்றும் மத்திய அரசு மீதும் விவசாயிகள் அமைப்பான கீர்த்தி கிஷான் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கான்கிரீட் தடுப்புச் சுவர்கள், இரும்பு ஆணி வேலிகள் மாநில எல்லைகளில் தடுப்பு அரணாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாஜக அரசு மகக்ளை பயமுறுத்த பயங்கரமான சூழலை உருவாக்கி வருகிறது, போராட்டக்காரர்களை நாட்டின் எதிரிகளை போல நடத்துகிறது என்று அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

No comments

Thank you for your comments