காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் விடையாற்றி உற்சவம் தொடக்கம்
காஞ்சிபுரம், பிப்.27:
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 25 ஆம் தேதி தங்க காமகோடி விமானத்தில் காமாட்சி அம்மன் வீதியுலா வரும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
இதன் தொடர்ச்சியாக காமாட்சி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெறும் விடையாற்றி உற்சவம் 26 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. இதனையொட்டி காலையில் விஸ்வரூப தரிசனக் காட்சி நடைபெற்றது.மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் ஆலய வளாக சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்தார்.
பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள சுக்ரவார மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.வேத விற்பன்னர்கள் வேதமந்திங்கள் மூலமாகவும்,இசைக்கலைஞர்கள் இசையின் மூலமாகவும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளும்,சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
விடையாற்றி உற்சவம் நிறைவு பெறும் நாளான மார்ச் 5ஆம் தேதி வரை தினசரி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளது.
மறுநாள் மார்ச் 6 ஆம் தேதி அம்மன் புஷ்பப்பல்லக்கில் நான்கு ராஜவீதிகளிலும் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,கோயில் மணியக்காரர் சூரிய நாராயணன்,செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.
படவிளக்கம் : விடையாற்றி உற்சவத்தின் முதல் நாள் நிகழ்வையொட்டி ஊஞ்சலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்த லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி
No comments
Thank you for your comments