மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் எல்.முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.
வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை(பிப்.15) கடைசி நாளாகும்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பாஜக அறிவித்துள்ளது.
மேலும், ஒடிஸா மாநிலத்துக்கான மாநிலங்களவை பதவிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்துகான மாநிலங்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்த நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதுதொடர்பாக தனது டெல்லி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன்,
"பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பணிபுரிவதற்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். இன்றுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்வேன். தமிழகத்தில் கூட்டணி இல்லை என்பதற்காக மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது கிடையாது. கூட்டணி அமைக்க இன்னும் நாட்கள் இருக்கின்றன. கட்சி எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். நாளைக்கே தமிழகத்தில் போட்டியிட கட்சி கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன்." என்றார்.
அப்போது, மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எல்.முருகன், "இது என்னுடைய முடிவு அல்ல. பாஜக தேசிய தலைமை எடுத்த முடிவு. எங்களுக்கு எந்த பயமும் கிடையாது.
ஆ.ராசா, திமுகவை தமிழகத்தில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்பதே எங்களின் முதல் பொறுப்பு, கடமை எல்லாம். அதற்கான பணியை தமிழக பாஜகவும், அண்ணாமலையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கூடிய விரைவில் திமுக தமிழகத்தில் இருந்து காணாமல் போகும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வென்று வருவார்கள்" என்று தெரிவித்தார்.
No comments
Thank you for your comments