ஆட்டோ கவிழ்ந்து 5 ஆம் வகுப்பு மாணவன் பலி, 3 பேர் காயம் - ஆட்டோ ஓட்டுநர் கைது

அம்பாசமுத்திரம்: 

அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவன் பலியானார். மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.



திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இருந்து அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு நாள்தோறும் சுந்தரம் என்பவர் தனது ஆட்டோவில் மாணவர்களை ஏற்றி வந்தார். 

இந்த நிலையில், ஆட்டோ அகஸ்தியர்பட்டி சாய்பாபா கோயில் அருகில் வரும்போது திடீரென ஆட்டோர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், ஆட்டோவின் அடியில் சிக்கிய விக்கிரமசிங்கபுரம் தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சித்திரை நாதன் மகன் பிரதீஷ் (10) அந்த இடத்திலேயே பலியானார். இவர் 5 ஆம் வகுப்புப் படித்து வந்தார்.  மேலும், இந்த ஆட்டோவில் வந்த மாணவர்களில் 3 பேர் காயமடைந்தனர்.   

இதையடுத்து காயமடைந்த மாணவர்கள் சிவதர்ஷினி, சூர்யா உள்பட 3 பேரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தகவலறிந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் பிரதீஷ் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் ஆட்டோ ஓட்டுநர் சுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Thank you for your comments