அயோத்தியில் பூஜை செய்யப்பட்ட அட்சதை நிரப்பிய கலசங்கள் - பொதுமக்களுக்கு வழங்கிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பு
காஞ்சிபுரம்,டிச.29:
காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அயோத்தியில் ராமர் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட அட்சதை,ராமர் கோயில் படம்,திருக்கோயில் ராமர்பிரதிஷ்டை செய்வதற்கான அழைப்பிதழ் ஆகியனவற்றை பொதுமக்களுக்கு வழங்கிட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது.அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களிடம் அட்சதைகள் நிரப்பப் பட்ட கலசங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் எம்பி ரமீளா பெண் பாரா,விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில செயலாளர் ஜெயந்தி சுரேஷ்,ஆர்எஸ்எஸ் அமைப்பின் காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் கோதண்டம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு,விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம்,ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கர்ஷினி அனுபவ ஆனந்த்,சஞ்சீவினி ஆசிரமத்தின் மடாதிபதி அனுமன் மாதாஜி, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள் ஆகியோர் அட்சதை நிரப்பிய கலசங்களை அந்தந்த வார்டுகளின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வி.ஜீவானந்தம் உட்பட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்,இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். மடாதிபதிகளிடம் அட்சதை கலசங்கள் பெற்றுக்கொண்ட பொறுப்பாளர்கள் ஊர்வலாக காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காந்தி ரோடு தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதியில் ஊர்வலம் நிறைவு பெற்றது.

No comments
Thank you for your comments