ஐ எஃப் எஸ் மோசடி விவகாரம்.. 10 மணி நேரத்திற்கு மேலாக காஞ்சிபுரத்தில் தொடரும் சோதனை
வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' (ஐஎப்எஸ்) செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளைகள் உள்ளன.
இந்நிறுவனம், வெளியிட்ட விளம்பரத்தில், 'எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும்' என்று தெவிக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட இந்த நிறுவனமானது 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதிகளில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக வேத நாராயணன், சத்தியநாராயணன் மோகன்ராம் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் வரை, மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை துவங்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பலர், ஐ எஃப் எஸ் நிறுவனம் மீது மோசடி புகார் கொடுத்து வருகின்றனர். வேலூர், ராணிப்பேட்டை, காட்பாடி, காஞ்சிபுரம் திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஐஎப்எஸ் வழக்கை பொறுத்தவரை, முக்கிய இயக்குனர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, முக்கிய இயக்குனர்கள் பலரும் வெளிநாடு தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் சமீபத்தில் , அரபு நாடு ஒன்றில் முக்கிய இயக்குனர் ஒருவர் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை போலீசார் ராணிப்பேட்டை, வேலூர், நெமிலி மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி பகுதியில் வசித்து வரும் இயக்குனர் மற்றும் முகவருமான சுரேஷ் என்பவர் வீட்டில் ஆறுக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை போலீசார் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின் அடிப்படையில் அமகளாக்கப் பிரிவு போலீசார் சோதனை என கேள்விப்பட்டவுடன் சுரேஷ் தப்பி சென்றதாகவும், தற்பொழுது சுரேஷ் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் அமலாக்கத்துறை போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Thank you for your comments