Breaking News

காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் இரண்டு உட்கோட்டங்களும், 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, எளிதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவும் அவற்றை சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் Petition Enquiry and Tracking System என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இச்செயலியின் மூலம் முதலாவதாக, மனு கொடுப்பவரின் விவரமும் மனுவின் தன்மை பற்றியும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்து அதற்கென தனியாக ஒரு மனு எண் (Complaint ID) ஒதுக்கப்படும். 

இரண்டாவதாக, அம்மனுவினை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அம்மனுவின் மீது எடுக்கபட்ட நடவடிக்கையின் விவரத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்கப்படும். இதற்கென, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தனித்தனியாக மொத்தம் 14 வரவேற்பாளர்கள் (Receptionist) பணியமர்த்தப்பட்டு உள்ளனர். 

இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் மனுக்களின் விவரத்தினையும் அதற்கான தீர்வினையும் எளிதாகவும் விரைவாகவும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய இயலும். மேலும், அவ்வாறு கொடுத்த புகார் மனுக்களின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா எனவும், மனுவில் கொடுக்கப்பட்ட அனைத்து எதிர்மனுதாரர்களையும் முறையாக அழைத்து விசாரணை செய்யப்பட்டதா எனவும், விசாரணை திருப்திகரமாக இருந்ததா எனவும், அதை பதிவு செய்து மாவட்ட தலைமையகத்தில் நியமிக்கப்படும் அலுவலர்களால் இதே செயலியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக கண்காணிக்கப்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடக்கமாக, காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன், IPS., அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் M.சுதாகர், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.வினோத் சாந்தாராம் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments