253 மகளிர்க்கு ரூ.1.68 கோடி மதிப்பில் வாழ்வாதார உதவி, ஹூண்டாய் மோட்டார்ஸ் அறங்காவலர் பேச்சு
காஞ்சிபுரம்,ஏப்.6:
கிராமப்புற மகளிர் வாழ்வாதார திட்டம் மூலம் இதுவரை 253 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1.68 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அறங்காவலர் சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை பேசினார்.
காஞ்சிபுரம் அருகே களியனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனமும், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து கிராமப்புற மகளிர்களுக்கு பால்கறக்க உதவும் பாத்திரங்கள்,ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் அறங்காவலர் சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொண்டு நிறுவன முதன்மை செயல் இயக்குநர் கொண்டா.ராதாகிருஷ்ணன், துறைத்தலைவர் கண்ணன், ஹூண்டாய் நிறுவன தொடர்புகள் துறை தலைவர் எஸ்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவர் ஸ்ரீலட்சுமி வரவேற்று பேசினார். முன்னதாக விழாவை காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட துணை இயக்குநர் கே.கவிதா குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிறந்த செயல் திறன் விருது 5 பெண்களுக்கும்,பால் கறக்க உதவும் பாத்திரங்கள் ஆகியனவற்றை மகளிர்க்கு வழங்கி ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர் சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் பேசியது..
இதுவரை 253 கிராமப்புற மகளிர்க்கு தலா ஒரு கன்று,ஒரு பசு வழங்கும் வாழ்வாதார திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை ரூ.1.68 வரை மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கன்றும், பசுவும் வழங்கப்பட்ட அனைவருக்கும் கால்நடைகள் பராமரிப்பு, தீவன உற்பத்தி, பால் கறக்கும் முறைகள் ஆகியன குறித்து பயிற்சியும், கால்நடை மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது. பாலை மதிப்புக்கூட்டி விற்பதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக மேலும் 200 பெண்களுக்கு இந்நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றும் பேசினார். இந்நிகழ்வில் வாழ்வாதார திட்ட கையேடு ஒன்றும் வழங்கப்பட்டது.







No comments
Thank you for your comments