ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்க கூடாது..! - சபாநாயகரிடம் மீண்டும் கோரிக்கை
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையை ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்க கூடாது எனவும், அந்த இருக்கையை அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என இபிஎஸ் அணியினர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்த நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கவிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் அதிமுக சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் சார்பாக பதில் கடிதம் அளிக்கப்ட்டது. அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் எனவும், எனவே எனது அனுமதியில்லாமல் ஆர்.பி,.உதயகுமாருக்கு எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்க கூடாது என தெரிவித்திருந்தார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று காலை சபாநாயகர் அப்பாவுவை, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
No comments
Thank you for your comments