Breaking News

திம்மராஜம்பேட்டை ராமநாதசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டையில் உள்ள பர்வதவர்த்தினி அம்பிகை சமேத ராமலிங்கேசுவரர் கோயிலில் தெப்பத்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

தாங்கி கிராமத்தில் பிச்சநாயக்கன் திருக்குளத்தில் பவனி வந்த அலங்கரிக்கப்பட்ட தெப்பம்(உள்படம்) தெப்பத்தில் பவனி வந்த பர்வதவர்த்தினி அம்பிகை சமேத ராமலிங்கேசுவர சுவாமி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மராஜம்பேட்டையில் வட ராமேசுவரம் என்ற பெயருடைய பழமை வாய்ந்த பர்வதவர்த்தினி அம்பிகை சமேத ராமலிங்கேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தெப்போற்சவத்தையொட்டி சுவாமியும், அம்மனும் ஆலயத்திலிருந்து கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் தாங்கி கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அக்கிராமத்தில் உள்ள சரஸ்வதி கம்பர் நிகர்த்தவல்லி திருக்கோயில் அருகே உள்ள பிச்சநாயக்கன் திருக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

தெப்பம் 5 முறை வலம் வந்தவுடன் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று சுவாமியும்,அம்மனும் மீண்டும் திம்மராஜம் பேட்டைக்கு எழுந்தருளினர்.திம்மராஜம்பேட்டை,தாங்கி உள்பட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்புத்துறையினரும், வாலாஜாபாத் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


No comments

Thank you for your comments