கோவையில் மட்டும் 15 இடங்கல் உட்பட தமிழகத்தில் 40 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை!
கோவை, பிப்.15-
கோவை: கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் மட்டும் 15 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை (பிப்.15) திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் திருச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மொத்தம் 40 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அதில், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயன மூலப் பொருட்கள், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வாசகங்கள் அடங்கிய பொருட்கள் உள்ளிட்ட 109 வகையான பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த முபின், தன் கூட்டாளிகளுடன் உதவியுடன் கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சர் கான் (27), சேக் இதயத்துல்லா, சனோபர் அலி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கர்நாடக மாநிலம் மங்களூரில் இதே பாணியில், ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்தது. இதில் குக்கர் குண்டை எடுத்துச் சென்ற முகமது ஷாரீக் என்பவர் படுகாயமடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மிகப்பெரிய தாக்குதல் சம்பவங்கள் நடத்த அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களும், ஒரே பாணியில் இருப்பதால், இரண்டு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவு எண்ணத்தில் இருந்த நபர்கள் என்பதும், முபினைப் போல், அவரது ஆதரவாளர்களும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளின் ஆதரவு எண்ண ஓட்டத்தில் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இவர்கள், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பதுங்கியிருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், கார் வெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரித்த என்ஐஏ அதிகாரிகள், அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்களை கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து கார் வெடிப்பு சம்பவம், குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவம் ஆகியவை தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறவும், ஐஎஸ் ஆதரவு நபர்களை பிடித்து அவர்களின் செயல்பாட்டை கண்டறியவும் என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திடீர் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, எஸ்.பி.ஸ்ரீஜித் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள், போலீஸார் அடங்கிய 15 குழுவினர் கோவையில் மாநகரப் பகுதியில் 14 இடங்கள், பொள்ளாச்சியில் ஒரு இடம் என 15 இடங்களில் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை உக்கடத்திலுள்ள கோட்டைமேடு வின்சென்ட் சாலை, பி.கே.செட்டி வீதி, குனியமுத்தூரில் உள்ள பிருந்தாவன் சர்க்கிள், வசந்தம் நகர், பாரத் நகர் உள்ளிட்ட 15 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதேபோல் திருச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மொத்தம் 40 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் பல்வேறு மின்னனு சாதனங்கள், ரூ.4 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தேவைப்படும் போது மீண்டும் சோதனை நடத்த என்ஏஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments
Thank you for your comments