கோயில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியவரை தட்டிக் கேட்ட ஊழியர் கொலை: பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்
சென்னை :
கோயில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியவரை தட்டிக் கேட்ட ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
நெல்லை மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஊழியர் திரு கிருஷ்ணன், கோவில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கோவில் வளாகத்துக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடக்கிறது என்பது ஒரு புறம். கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, கோவில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து,
கோவில்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும், சாராயக் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இது போன்ற குற்றச் செயல்களை புரிய காரணமாக அமைந்திருக்கிறது.
இனியும் கோபாலபுர குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே தனது பணி என்றிருக்காமல், உடனடியாக அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் கோவில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும்,
உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு தமிழக பாஜக, உடனடியாகத் தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments