தமிழகத்தில் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனை
தமிழகம் முழுவதும் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையின்போது ஆடை விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு போலி பில் கொடுத்து வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கடலூர், விழுப்புரம், கரூர், குளித்தலை, திருப்பூர், நாமக்கல், நெய்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட துணிக்கடைகளில் இன்று காலைமுதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படும் துணிக் கடைக்கு காலை 9 மணிக்குள் சென்ற வருமான வரித்துறையினர் கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு சோதனையை தொடங்கினர். முசிறியில் உள்ள கடையின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கடலூரில் இயங்கி வரக்கூடிய பிரபல துணிக்கடையில் புதன்கிழமை காலை சென்னையில் இருந்து 6 காரில் வந்த 15 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் குமரன் சாலையில் உள்ள துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் காலை 10 முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை முடிவில் துணிக் கடைகளில் எந்த அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது எனத் தெரியவரும்.


No comments
Thank you for your comments