Breaking News

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, அக்.13-

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்தால் ஏற்படும் இழப்புகளுக்காக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது



3 பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்குவது என்ற பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் யோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), பாரத பெட்ரோலியக் கழகம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்து, இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் பொருட்களின் கொள்முதலுக்கு ஆதரவு தந்து தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான  உறுதிப்பாட்டை தொடர இந்த ஒப்புதல் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும்.

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "

ஐஓசிஎல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் ஆகிய பொதுத்துறை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.  இருப்பினும்,  சமையல் எரிவாயு விலை வாடிக்கையாளர்களுக்கு அந்த அளவுக்கு உயர்த்தப்படவில்லை.  மாறாக இந்த காலத்தில் 72 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது.  இருப்பினும், நாட்டின் அத்தியாவசியமான சமையல் எரிவாயு விநியோகத்தை 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

இதேபோன்று, 2021-22 ஆம் நிதியாண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான  உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் முன்தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் பூஜை விடுமுறை நாட்களுக்கு முன் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படும்.  இந்த ஆண்டும் 11.27 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தியுடன் இணைந்த போனஸ் தொகை வழங்கப்பட்டது.  தண்டவாள பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் வண்டி பாதுகாப்பாளர்கள் (கார்டுகள்), நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், சமிக்ஞை இயக்குவோர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் சி-பிரிவு ஊழியர்கள் போன்றோருக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டது.

இதனால், அரசுக்கு ரூ.1,832.09 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  கொவிட்-19 க்கு பிந்தைய சவால்களால் சிக்கலான நிதிநிலைமை ஏற்பட்டபோதும், இந்த போனஸ் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், டாக்டர். எல். முருகன் மற்றும் முதன்மை இயக்குநர் ஜெனரல் (எம்-சி), பிரஸ் இன்பர்மேஷன் பீரோ, ஸ்ரீ சத்யேந்திர பிரகாஷ் ஆகியோரும் செய்தியாளர்கள் சந்திப்பில் உடன் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments