20 ஏக்கரில் மின் நிலையம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை:
சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து, அதை ரயில்களை இயக்கப் பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவுள்ளது.
சென்னையில் தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த இரு பாதையை இணைக்கும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த தடங்களில் மொத்தம் 40 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சுரங்கத்தில் 20 நிலையங்களும், தரைக்கு மேல் 20 நிலையங்களும் உள்ளன.
இந்நிலையில், இந்த ரயில் நிலையங்களுக்கு தேவையான மின்சாரம் தற்போது மின்சார வாரியத்திடம் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகள், அலுவலக இடங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் சோலார் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட திட்டங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் 5 முதல் 6 மெகாவாட் அளவுக்கு சோலார் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் எங்கு எல்லாம் தகடுகள் அமைத்து சோலார் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்ய உள்ளது.
இதன்படி கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அசோக் பில்லர், ஆலந்தூர், கத்திபாரா, சைதாப்பேட்டை, மன்னடி உள்ளிட்ட இடங்களில் உள்ள 20 ஏக்கர் அளவிலான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த இடங்கள் உட்பட மேலும் எந்த இடங்களில் எல்லாம் சோலார் பேனல் அமைக்க முடியும் என்று கண்டறிய விரிவான திட்ட தயார் செய்யும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளது.
No comments
Thank you for your comments