மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினரும், கட்சி பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேச்ஜ் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வெளிநாடு செய்கிறார். டெல்லி திரும்பும் முன் அவர் தனது தாயாரையும் சந்தித்து வருவார். சோனியாவுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ராவும் செல்கின்றனர்.
ராகுல் காந்தி, செப்டம்பர் 4 ஆம் தேதி காங்கிரஸ் பேரணியை தொடங்கிவைத்து உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த அறிக்கையில் அவர்கள் எப்போது புறப்படுகின்றனர். எப்போது மீண்டும் இந்தியா திரும்புகின்றனர் என்ற விவரங்கள் இல்லை. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்ணியாகுமரியில் காங்கிரஸ் யாத்திரையை தொடங்குகிறார்.
முன்னதாக செவ்வாய் கிழமை (ஆக.23ம் தேதி) அன்று காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முர்முவுக்கு, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். தற்போது தொற்று சரியான நிலையில் அவர் குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments