என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
விழுப்புரம்:
"நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், வியாழக் கிழமை (ஆக.25) நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பி.இ., படிப்பில் சேருவதற்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் வியாழக் கிழமை (25ம் தேதி) தொடங்கி அக்டோபர் 21ம் தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளி வராததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25ம் தேதி தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் நீட் தேர்வு எழுதி இருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும்பட்சத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேராமல் மருத்துவ படிப்புக்கு சென்று விடுவார்கள். இதனால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டு விடும்.
இப்படித்தான் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. இதை தவிர்ப்பதற்காகத்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த 7 நாட்களுக்குள் மாணவர்கள் சேர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலியாக இருப்பதாக கருதப்பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் என்று புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21ம் தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28ம் தேதிக்கு தள்ளிப்போவதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் திட்டமிட்டபடி 25ம் தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.25) முதல் தொடங்குவதாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இந்த கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்திருக்கிற காரணத்தால், இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ முடிவுகள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால், ஏற்கெனவே கொடுத்திருந்த கால அவகாசத்திற்கு பின் 5 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தோம்.
தற்போதும் நீட் தேர்வு முடிவுகள் முதலில் வரும் என்று நினைத்தோம். 21ம் தேதி முடிவுகள் வரும் என்று கூறினார்கள், ஆனால் இன்னும் வெளியிடமால் காலம் தாழ்த்தப்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானால், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பலர் அங்கு சென்றுவிடுவார்கள், அதனால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன" என்று அவர் கூறினார்.
முன்னதாக, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆக.20ம் தேதியன்று நடந்தது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.25ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments
Thank you for your comments