காஞ்சிபுரத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், ஜூலை 4-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்பாக கல்லூரிப் பேராசிரியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் 3 கல்லூரிகள்,கடலூரில் ஒரு கல்லூரி மற்றும் காஞ்சிபுரத்தில் இரு கல்லூரிகள் என மொத்தம் 6 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் கூட்டமைப்பான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் எம்.எஸ்.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து சங்க பொருளாளர் ஆர்.சரவணன் பேசியது..
உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் அறக்கட்டளை தேர்தலை நடத்த உத்தரவிட்டும் நடத்தாமல் இருந்து வருவது, அறக்கட்டளை நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களை அடிக்கடி பணியிட மாற்றம் செய்வது, கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்களையும், பணியாளர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையை கடைப்பிடிப்பது, தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் உடனடியாக தமிழக அரசு தனி அலுவலரை நியமித்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments