Breaking News

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்- குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் விசாரணை

ஈரோடு: 

ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



இது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கருமுட்டை மூலம் கிடைத்த பணத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, டாக்டர்கள் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் உயர்மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரிடம் தனித்தனியாக மருத்துவப் பணிகள் குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையில் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில்  தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் உறுப்பினர்கள் மல்லிகா, துரைராஜ், சரண்யா ஜெயக்குமார், முரளிகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். 

அவர்கள் கருமுட்டை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி, சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் கருமுட்டை விவகாரம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் இது தொடர்புடைய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரம் குறித்தும் கேட்டறிந்தனர்.


 

No comments

Thank you for your comments