Breaking News

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்திட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: 

உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்திட தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் , டைடல் பூங்காவுடன் இணைந்து, டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்கா அமைத்துள்ளது. இப்பூங்காவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும் இணைந்து, உயிரி தொழில்நுட்ப முதன்மை கருவியாக்க மையத்தை அமைத்துள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்திற்கிணங்க, இக்கருவியாக்க மையத்தின் வசதிகளை பயன்படுத்தி, உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்திடவும், அதன்மூலம் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் நம் மாணவர்கள் வேலை பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், உயிரி துறையில் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட உதவும் வகையிலும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கென சென்னையிலுள்ள கிரசண்ட் இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் கவுன்சில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை இன்குபேசன் மையம், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா R&D இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி மற்றும் வேல்டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர், அசோசியேசன் ஃபார் பயோ இன்ஸ்பையர்ட் லீடர்ஸ் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப வணிக இன்குபேசன் மையம், சாஸ்தரா TBI மற்றும் விஐடி – டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்களுடன் டைசல் நிறுவனம் இன்று காலை முதல்வர் முன்னிலையில் தலைமைசெயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-IIல் 350 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் தொழிற் பூங்காவில், முதல் நில ஒதுக்கீட்டு ஆணையினை, ஜெனியுன் பயோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (தொழில்நுட்பம்) டாக்டர் மு. தனசேகரனிடம் முதலமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, சிப்காட் நிறுவனத்தால். 35 கோடி ரூபாய் செலவில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் 85,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று கருத்தரங்கு கூடங்கள் மற்றும் இரண்டு பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு உதவும் ஏற்றுமதி வணிக வசதிகள் மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில் சிப்காட் நிறுவனத்தால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவில், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 400 ஆண் பணியாளர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 41,082 சதுர அடி பரப்பளவில் 10.19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் தங்கும் விடுதிக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் 3000 சதுர அடி கட்டுமானப்பரப்பில் சுற்றுச்சுவருடன், 1.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 3555 சதுர அடி கட்டுமானப் பரப்பில் சுற்றுச்சுவருடன் தொழில் பூங்காவிற்குள்ளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவைகேற்ப மீட்புப்பணி சேவை மேற்கொள்ள 1.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் என மொத்தம் 48 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

No comments

Thank you for your comments