உக்ரைன் அரசு இந்திய மாணவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
புதுடெல்லி:
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதுகுறித்து இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் பேசியுள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் மக்களவையில் உக்ரைன் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பை நிறைவு செய்ய ருமேனியா, ஹங்கேரி, போலந்து, கஜகஸ்தான் ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கி உள்ளது. மருத்துவக் கல்வியை முடிக்க ஓராண்டு தளர்வு வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
போர்களை உடனடியாக நிறுத்துவதற்கும், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
போர் தொடர்பான விஷயத்தில் இந்தியா ஏதேனும் உதவி செய்ய முடிந்தால், நாங்கள் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைவோம் என டெல்லி வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவிடம் தெரிவித்தோம் என்றார்.
No comments
Thank you for your comments