ரூ.5 லட்சம் பரிசுடன் கூடிய ‘கலைஞர் எழுதுகோல் விருது’ : விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை:
2021ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.
கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதாளரை தேர்வு செய்ய பேராசிரியர் அருணன் தலைமையில் உறுப்பினர் செயலாளர் - கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு), உறுப்பினர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம், முனைவர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் அரங்க மல்லிகா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜுன் 3ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கெளரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டது. அவ்வகையில், 2021ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதில் ரூபாய் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.
கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:
1) விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும்.
2) பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3) இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.
4) விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
5) விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 என்ற முகவரிக்கு 30.4.2022-க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
No comments
Thank you for your comments