பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை:
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
டெல்லி தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக திமுக சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு திமுக தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஏராளமானோர் திரண்டு வந்து மு.க.ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையும் வழங்கினர்.
இரவில் வரவேற்பு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். நேற்று இரவு அங்கு அவர் தங்கினார். இன்று (வியாழக்கிழமை) காலை அவரை டி.ஆர். பாலு தலைமையில் திமுக எம்.பி.,க்கள் சந்தித்தனர். அவர்களுடன் திமுக அலுவலக திறப்பு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டு சென்றார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் மோடி-மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது, டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.
அதன்பிறகு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதன் விவரங்கள் வருமாறு:
1) நீர்வளப் பிரச்சனைகள் காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான பிரச்சனை
2) மீன்வளம் (அ) பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் (ஆ) "கச்சத்தீவு" மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது
3) எரிசக்தி (அ) நிலக்கரி குறித்த விவகாரங்கள் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான இரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்யக் கோருதல் (ஆ) ரெய்கார் - புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல்
4) நிதி (அ) மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது (ஆ) ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல்
5) சுகாதாரம் (அ) மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு (ஆ) உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிதல்.
6) வேளாண்மை பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்.
7) தொழில்கள் (அ) காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகம் (ஆ) டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு (இ) தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைத்தல் (ஈ) சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்படுதல் (உ) மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (MMLP) வரை ரயில் பாதை அமைத்தல்.
8) பள்ளிக்கல்வி தேசிய கல்வி கொள்கை -2020
9) சென்னை மெட்ரோ ரயில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - II- இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல்
10) பிற்படுத்தப்பட்டோர் நலன் 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்கக் கோரிக்கை
11) பொது (அ) இலங்கை தமிழர் பிரச்சினை-ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் (ஆ) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக.
12) போக்குவரத்து தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள்
13) சுற்றுச்சூழல் (அ) நியூட்ரினோ ஆய்வக (INO) திட்டத்தை கைவிடக் கோரிக்கை (ஆ) கூடங்குளம் அணுமின் திட்டம் - செலவழித்த அணு எரிபொருள் நீக்குதல் தொடர்பாக (SNF)
14) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
குறிப்பாக தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும் என்று கூறினார். மேலும் ஜி.எஸ்.டி. நிலுவை தொகையையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை பற்றியும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தனது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் மனுவாக தயாரித்து வைத்திருந்தார். அந்த மனுவை பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நீண்ட நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை சந்தித்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் குறித்து பேசினார்.
முன்னதாக, டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். வேறு சில கட்சி தலைவர்களுடனும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தேசிய அரசியலில் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்த சந்திப்புகள் முடிந்த பிறகு சனிக்கிழமை காலை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையும் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஏப்.2-ம் தேதி மாலை 5 மணிக்கு டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடக்கிறது.
அந்த விழாவில் கலந்து கொண்டு அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்கிறார். இதற்காக டெல்லி திமுக அலுவலகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திறப்பு விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சனிக்கிழமை இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்ப உள்ளார்.
No comments
Thank you for your comments