Breaking News

நிலக்கரி கையாளும் ஒப்பந்த பணி ஒரே நிறுவனத்திடம் வழங்க முடிவு

சென்னை, பிப்.3-

முறைகேட்டை தடுக்க, திருவள்ளூரில் உள்ள எண்ணூர் துறைமுகத்திற்கு, கப்பல்களில் வரும் நிலக்கரியை இறக்கி, மின் நிலையங்களுக்கு அனுப்பும் பணிகளை, ஒரே ஒப்பந்த நிறுவனம் வாயிலாக மேற்கொள்ள, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, 'வட சென்னை' என்ற பெயரில், அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.விரிவாக்கம்அதன் அருகில், 'வட சென்னை விரிவாக்கம்' என்ற பெயரில், 600 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் உள்ளது.

ஒடிசாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கப்பல்களில் ஏற்றப்பட்டு, எண்ணூர் துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது.அந்த துறைமுகத்தில் நிலக்கரியை இறக்கி, மின் நிலையத்திற்கு அனுப்புவது உள்ளிட்ட நிலக்கரி கையாளும் பணி தற்போது, நான்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கப்பல்களில் வரும் நிலக்கரியை, துறைமுக முனையத்தில் இறக்கும் பணியை ஒரு நிறுவனமும், முனையத்தில் இருந்து 'கன்வேயர் பெல்ட்'டில் வட சென்னை மின் நிலையத்தில் உள்ள 'யார்டு'க்கு அனுப்பும் பணியை, மற்றொரு நிறுவனமும் மேற்கொள்கின்றன.

யார்டுக்கு வரும் நிலக்கரியின் ஒரு பகுதியை எடுத்து, சரக்கு ரயிலில் ஏற்றி, சேலம், மேட்டூர் மின் நிலையத்திற்கு அனுப்பும் பணியை, ஒரு நிறுவனமும்; யார்டில் இருந்து வட சென்னை மின் நிலையங்களில் உள்ள அலகுகளுக்கு அனுப்பும் பணியை, மற்றொரு நிறுவனமும் செய்கின்றன.முறைகேடுநிலக்கரி கையாளும் பணியை, நான்கு நிறுவனங்கள் மேற்கொள்வதால், அவற்றிடம் ஒருங்கிணைப்பு இருப்பதில்லை.

இதனால், அந்நிறுவனங்களின் கணக்கு சரிபார்ப்பதில் பல சிரமங்கள் நிலவுகின்றன. மேலும், நிலக்கரி 'கன்வேயரில்' சரியாக வராததால் தன்னால் கையாள முடியவில்லை என, ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனம் மீது புகார் கூறுவது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன.

ஒரு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினால், அந்நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் மீது குறை கூறுகிறது. இவ்வாறே அனைத்து நிறுவனங்களும் செய்வதால், எங்கு தவறு நடந்திருப்பது என்பதை கண்டறிந்து, சரிசெய்வதில் சிரமம் ஏற்படுகிறது

இதனால், நிலக்கரி கையாளும் பணியை, வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே நிறுவனம் வாயிலாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது; திட்ட செலவு, 540 கோடி ரூபாய்.

இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, துறைமுகத்தில் இருந்து நிலக்கரி அனுப்பும் பணிகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு பணிக்கும், 120 கோடி ரூபாய்; 100 கோடி ரூபாய் என, தனித்தனி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த பணிகளை மேற்கொள்ளும் நான்கு நிறுவனங்களிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால், கணக்கு சரிபார்ப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, ஒரே நிறுவனம் வாயிலாக, நிலக்கரி கையாளும் பணி மேற்கொண்டால் பிரச்னைகள் வராது. தவறு கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மின் வாரிய டெண்டரில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள், டெண்டரில் வழங்கும் விதிகளின்படி வேலை செய்யாததால், தரம் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுகின்றன.இதற்கு சில நிறுவனங்களுக்கு ஆதரவாக முடிவு எடுப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.

தற்போது, அதற்கு இடம் அளிக்காத வகையில், நிலக்கரி கையாளும், 540 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிக்கு, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

No comments

Thank you for your comments