Breaking News

மத்திய அரசு முக்கிய செய்திகள் தொகுப்பு....

 அனைத்து துறைகளிலும் இந்தியாவை தற்சார்பாக்க அறைகூவல் விடுப்பு

புதுடெல்லி, ஜன.3-

இந்தியாவை அனைத்து துறைகளிலும் முழு தற்சார்பு கொண்டதாக மாற்ற குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு நேற்று (02/01/2021 )அழைப்பு விடுத்தார்.


கொச்சியில் உள்ள கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு பொருட்களை அதிகரிப்பதன் அவசியத்தையும் இறக்குமதியைக் குறைக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார்.

"அதை அடைவதற்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதிக ஊக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தனியார் துறை கூட்டை அனுமதிக்க வேண்டும். சாத்தியமான இடங்களில், கடுமையான தரக் கட்டுப்பாடுகளுடன் இது செய்யப்பட வேண்டும்", என்று திரு நாயுடு குறிப்பிட்டார்.

நீருக்கடியில் பாதுகாப்பிற்கு முக்கியமான சோனார் அமைப்புகளின் மேம்பாட்டிற்கு இன்றியமையாத "டோவ்டு அரே இன்டக்ரேஷன்” வசதிக்கு குடியரசு துணைத்தலைவர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். அமைதியான எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கடற்படையின் திறனை இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பத்தாண்டுகளில் உலக வல்லரசாக உருவெடுக்க இந்தியா வலுவாக முன்னேறி வருகிறது என்று கூறிய அவர், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பிற துறைகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் சிறந்த பணிகளைச் செய்த விஞ்ஞானிகளைப் பாராட்டினார்.

பாதுகாப்பு உபகரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இந்தச் சூழலில், தேசத்தின் பாதுகாப்புத் தேவைகளில் வலுவூட்டுவதில் என்பிஓஎல் போன்ற சிறிய ஆய்வகத்தின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்றார்.




👀 👀  🎆🎆🎆 👀 👀 

தற்சார்பு இந்தியாவின் மாபெரும் அடையாளம் ஐஎன்எஸ் விக்ராந்

கொச்சி, ஜன.3-

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு கொச்சியில் பார்வையிட்டார்.

இந்தியாவின் மாபெரும் அடையாளமாக அது திகழ்வதாக புகழாரம் சூட்டிய அவர், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பலுக்கான தேசத்தின் கனவு நனவை ஐஎன்எஸ் விக்ராந்த் நனவாக்கி உள்ளதாக கூறினார்.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு மது எஸ் நாயர் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கப்பலின் கட்டுமான செயல்முறை குறித்து திரு நாயுடுவிடம் விளக்கினர். 

கொச்சியில் உள்ள டிஆர்டிஓவின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தில் பின்னர் நடந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நாயுடு, ஐஎன்எஸ் விக்ராந்தைப் பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அது ஒரு 'தொழில்நுட்ப அற்புதம்' என்றும் கூறினார்.

விமானம் தாங்கி கப்பலை உருவாக்குவதில் இந்திய கடற்படைக்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை திரு நாயுடு பாராட்டினார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள அரசின் தொழில் துறை அமைச்சர் பி ராஜீவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.


👀 👀  🎆🎆🎆 👀 👀

தீவுகளைக் காப்பாற்றும் வகையில்,

உலக வெப்பநிலை அளவைக் குறைக்க உலகம் முழுவதும் உறுதியான முயற்சிகள் அவசியம்

குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்


சிறு தீவுகளின்  கம்பீரமான அழகை நிலைக்கச் செய்யவும், தீவுகளின் வீடுகள் காப்பாற்றப்படவும், உலக வெப்ப நிலையை ஒரு அளவுக்குள் கொண்டு வர, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவுகளில் தமது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்த குடியரசு துணைத்தலைவர், தமது பயண அனுபவத்தை முகநூலில் எழுதியுள்ளார். லட்சத்தீவுகள் இந்தியாவின் ரகசியம் என்று கூறியுள்ள அவர், நீலமும், பச்சை வண்ணமும் கலந்த கடல் நீர், நீண்டு வளர்ந்த பனை மரங்கள், வெள்ளை நிற மணல், அடர்ந்த நீலவானம் ஆகியவற்றால் சூழப்பட்ட மகிழ்ச்சிகரமான தீவு என வர்ணித்துள்ளார்.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றால் சிறு தீவுகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், மிகக்குறைந்த அளவு உமிழ்வை வெளியிடும் சிறு தீவுகள், அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவது நியாயமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். கடல் மட்டம் அதிகரிப்பு, புயல்கள், வெள்ளம், கடலரிப்பு போன்றவை உலகில் உள்ள பல்வேறு தீவுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

சுற்றுலாவை மேம்படுத்தி, கடலோரச் சூழலைப் பாதுகாக்க உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு  வரும் லட்சத்தீவு நிர்வாகத்தைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், இந்த அணுகுமுறையை இதர சுற்றுலா தலங்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தீவுகளை தூய்மையாக வைத்திருப்பதில் பங்காற்றும் லட்சத்தீவு மக்களை அவர் பாராட்டியுள்ளார்.

லட்சத்தீவு பிராந்தியத்தில், மீன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், தீவு நிர்வாகம் இந்த விஷயத்தில் எடுத்து வரும் முயற்சிகளைப் புகழ்ந்துள்ளார். மீன் வளத்துறைக்கு ஊக்கமளிக்க நமது விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் இயற்கை பன்மைத்தன்மை குறித்து குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், ‘’ சுற்றுலா என்று வரும்போது இந்தியா சிறந்தவற்றை கொண்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. வலிமையான இமயமலை, ராஜஸ்தானின் கட்டட விநோதம், இமாச்சலப் பிரதேசத்தின் பளிங்கு போன்ற தெளிந்த நீர் கொண்ட ஏரிகள், உத்தராகண்டின் ஆன்மீக வழிகள், வியப்பூட்டும் கோவாவின் கடற்கரை, கேரளாவின் அமைதியான உப்பங்கழிகள், மத்தியப்பிரதேசத்தின் வனவிலங்கு சரணாலயங்கள், வடகிழக்கின் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கைக் காட்சிகள், தேயிலை தோட்டங்கள், கட்சின் ரான் அழகு’’ என பட்டியலிட்டுள்ளார். 

இந்தியாவில் ஒவ்வொருவரும் பயணம் செய்து, நமது தாய்நாட்டின் அழகிய அம்சங்களை அனுபவிக்குமாறு குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார். அதே சமயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதவாறு பயணம் அமைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

👀 👀  🎆🎆🎆 👀 👀

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வரைவு

"தேசிய விமான விளையாட்டு கொள்கை"யை பொதுமக்களின் கருத்துக்காக வெளியீடு

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வரைவு "தேசிய விமான விளையாட்டு கொள்கை"யை பொதுமக்களின் கருத்துக்காக வெளியிட்டுள்ளது

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், வரைவு ‘தேசிய விமான விளையாட்டு கொள்கை ‘யை பொதுமக்களின் கருத்துக்காக வெளியிட்டுள்ளது. வரைவு கொள்கையை அமைச்சகத்தின் இணைய தளத்தில் : https://www.civilaviation.gov.in/sites/default/files/Draft-NASP-2022.pdf என்ற இணைப்பு மூலம் பெறலாம்.

ஆலோசனைகளை 2022 ஜனவரி 31-ம்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பலாம்.

உலகின் விமான விளையாட்டு முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாகும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. பூகோள ரீதியில் விரிவான பரப்பு, பல்வேறு பரந்துபட்ட நிலப்பரப்பு , உகந்த தட்ப,வெப்ப நிலை ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளது. மேலும் குறிப்பாக, இளைஞர்களை அதிகம் கொண்ட மக்கள் தொகையையும் அது பெற்றுள்ளது. சாகச விளையாட்டுக்களுக்கான கலாச்சாரமும், விமானப் போக்குவரத்தும் இங்கு வளர்ந்து வருகிறது. விமான விளையாட்டு நடவடிக்கைகள் மூலம், நேரடி வருவாயுடன், விமானப் பயணம், சுற்றுலா, உள்கட்டமைப்பு, குறிப்பாக மலைப்பகுதிகளில் உள்ளூர் வேலைவாய்ப்பு போன்ற பலதரப்பட்ட பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் விமான விளையாட்டு மையங்களை உருவாக்குவதன் மூலம், வெளிநாட்டு விளையாட்டு நிபுணர்கள், சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு அதிகமாக வர வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதன் காரணமாக, மத்திய அரசு விமான விளையாட்டு துறையை பாதுகாப்பான விதத்திலும், எளிதில் அணுகும் வகையிலும், நிலைத்தன்மையுடன் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.  இதற்கு தேவையான பயிற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள், விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவது அவசியமாகும்.

வரைவு தேசிய விமான விளையாட்டு கொள்கை ( என்ஏஎஸ்பி 2022) இத்திசையை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும். கொள்கை வகுப்பாளர்கள், விமான விளையாட்டு பயிற்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று இது உருவாக்கப்படும். காலத்திற்கு தகுந்தவாறு மாறுதல்களுக்கு உட்படுத்தும் வகையில் இது அமைந்திருக்கும்.

👀 👀  🎆🎆🎆 👀 👀



No comments

Thank you for your comments